சங்ககாலத் தமிழ் எழுத்துக்கள்
(தமிழி அல்லது தமிழ் பிராமி)
(பொ.ஆ.மு.5 - பொ.ஆ. 3ஆம் நூற்றாண்டு)
சங்ககாலத்தில் தமிழ் மொழிக்கு வழக்கிலிருந்த
எழுத்துக்கள் இவையே ஆகும். இவை பலவாறாகப் பெயரிட்டு அழைக்கப் பெறுகின்றன.
சங்ககாலத் தமிழ் எழுத்துக்கு வழங்கப் பெற்ற பிற பெயர்கள்:
இவ்வெழுத்துக்கள் தமிழி, தமிழ் பிராமி, பழந்தமிழ்
என்று பலவாறாக அழைக்கப் பெறுகின்றன. அவற்றுக்கான காரணம் பின்வருமாறு: வட
இந்திய பிராமி எழுத்துக்களுக்கும் சங்ககாலத் தமிழகத்தில் வழக்கத்திலிருந்த
எழுத்துக்களுக்கும் உருவ அளவில் ஒற்றுமை இருப்பினும் பல வேறுபாடுகள் உள்ளன.
“தமிழி” யில் வர்க்க எழுத்துக்கள் இல்லை. கூட்டெழுத்து முறைகளும் உரசொலி
எழுத்துக்களும் இல்லை. அதுபோல் தமிழ் எழுத்துக்களில் உள்ள ழ, ள, ற, ன வடிவங்கள்
வட இந்திய பிராமியில் இல்லை. இந்தியாவில் பிற பகுதிகளில் கிடைக்கும் பிராமி
எழுத்துகள் பிராகிருத மொழியில் (புத்த தர்மத்தை போதிப்பனவாக) இருக்கும் பொழுது
தமிழ் நாட்டில் தமிழ் மொழி மட்டுமே பயன்படுத்தப் பெற்றுள்ளது. எனவே தமிழகத்தில்
கிடைக்கும் பிராமி எழுத்துக்களை வட இந்திய பிராமியிலிருந்து வேறுபடுத்தி
உணர்த்தும் பொருட்டு இவை தமிழ் பிராமி அல்லது தமிழி என்று அழைக்கப்படுகிறது.
இதை நாம் சங்ககாலத் தமிழ் எழுத்துக்கள் என்றே அழைக்கலாம். அந்த எழுத்துக்களே
இங்கு காட்டப்பட்டுள்ளன.
பெயர்க்காரணம்:
இந்தியா முழுவதும் கிடைக்கும் பிராமி கல்வெட்டுக்களில்
பெரும்பாலும் பிராகிருத மொழி இடம்பெறுகிறது. ஆனால் தமிழகத்தில் கிடைக்கும்
கல்வெட்டுக்களில் தமிழ் மொழி மட்டுமே இடம்பெறுகிறது. சில பிராகிருத வரிவடிவங்கள்
(ஸ, த4) மற்றும் ஒரு சில பிராகிருத சொற்கள் (த4 ம்மம் ஸாலகன்) மிகவும் அரிதாகவே
கிடைக்கின்றன. எனவே எழுத்து ஒற்றுமையிருப்பினும் மொழி மற்றும் சில சிறப்புத்
தன்மைகள் காரணமாக சங்க காலத்தில் கிடைக்கும் பழந்தமிழ் எழுத்துக்களை இப்பொழுது
இருக்கும் தமிழ் எழுத்திலிருந்தும் அசோக பிராமி எழுத்திலிருந்தும் வேறுபடுத்துமுகமாக
வழங்கப்பெற்ற பெயரே “தமிழி” அல்லது “தமிழ் பிராமி” என்பதாகும். தமிழகத்தில்
கிடைக்கும் பிராமி எழுத்திற்கு “தமிழ் பிராமி” என்று பெயரிட்டவர் ஐராவதம்
மகாதேவனாவார். அதுபோல் “தமிழி” என்று பெயரிட்டவர் நாகசாமியாவார். இதனை “தொன்மைத்
தமிழ் எழுத்துக்கள்” என நடன காசிநாதன் மற்றும் சு.இராசவேல் போன்றோர் குறிப்பிடுகின்றனர்.
சமண சமயத்தின் ரிஷபதேவருக்கு (முதல் தீர்த்தங்காரர்) இரு மகள்கள் என்றும் அவற்றுள் ஒருத்தி பெயர் “சுந்தரி” என்றும், இன்னொரு மகளின் பெயர் “பிராம்மி” என்றும் கூறி, சுந்தரி என்பது மொழியையும், பிராமி என்பது எழுத்தையும் குறிப்பதாகவும் ஒரு கருத்து நிலவுகிறது. இக்கருத்து பாகவதம் 5இல் விளக்கப்பட்டுள்ளதாகவும் கணேசன் கூறுகின்றார். இவ்வெழுத்துக்களின் தன்மை (Nature of Inscriptions)
சங்கத் தமிழ் எழுத்துப் பொறிப்பு பெற்ற கல்வெட்டுக்கள் கிடைக்கும் இடங்கள்
* தற்பொழுது இவ்விடம் கேரளாவில் உள்ளது. இது தொன்மைப் தமிழகப் பகுதியாகும்.
எடக்கல் கேரளாவில் (பழைய தமிழகத்தில்) உள்ளது. அதனால் சேர்க்கப் பெற்றுள்ளது.
காலம்: தோராயமாக (பொ.ஆ.மு. 500 - பொ.ஆ. 400)
பொ.ஆ.மு 5ஆம் நூற்றாண்டு (பொருந்தல்
மற்றும் கொடுமணல் அகழாய்வுகளில் கிடைத்த பானை ஓட்டின் அடிப்படையில் இதன்
மேலெல்லை பொ.ஆ.மு. 5ஆம் நூற்றாண்டெனத் தொல்லியலாளர் கா.ராஜன் (பேராசிரியர்,
வரலாற்றுத்துறை, பாண்டிச்சேரிப் பல்கலைக்கழகம், பாண்டிச்சேரி) அண்மைக்
காலத்தில் காலத்தை குறித்துள்ளார். பொ.ஆ. 4ஆம் நூற்றாண்டு வரை
இவ்வெழுத்துக்கள் வழக்கிலிருந்துள்ளன. பிறகு இவ்வெழுத்துக்களே மாற்றம்
பெற்று வட்டெழுத்துக்களாக வளர்ச்சியடைந்துள்ளன. அதற்கான தொடர்ச்சியான
கல்வெட்டுச் சான்றுகள் உள்ளன. எனவே சங்க காலத் தமிழ் எழுத்துக்கள்
பொ.ஆ.மு.5 ஆம் நூற்றாண்டு முதல் பொ.ஆ.4 ஆம் நூற்றாண்டு வரை என்று காலம்
கணிக்கப் பெறுகிறது.
பெயர்க்காரணம்:
பொதுவாக இந்தியாவில் முந்தைய
காலங்களில் “பிராமி”, “கரோஷ்டி” என்ற இரு வகை எழுத்துக்கள்
வழக்கத்திலிருந்துள்ளன என்பது 19ஆம் நூற்றாண்டில் மேற்கொள்ளப்பட்ட
ஆய்வுகளிலிருந்து வெளிக்கொணரப்பட்டுள்ளன. இவற்றில் “பிராமி” எழுத்துக்களே
இந்தியா முழுவதும் நன்கு வழக்கத்திலிருந்துள்ளன. இவ்வெழுத்துக்களிலிருந்தே
பின்னர் வந்த பிராந்திய வரிவடிவங்கள் எழுச்சி பெற்று வளர்ந்து இன்றைய
நிலையை அடைந்துள்ளன என்பது பெரும்பாலும் ஏற்கப்பட்டுள்ள கருத்தாகும்.
“கரோஷ்டி” எழுத்துக்கள் இந்தியாவின் வட மேற்குப் பகுதியில் ஒரு குறிப்பிட்ட
கால கட்டத்தில் மட்டுமே வழக்கத்திலிருந்துள்ளன. ‘பிராமி’ வடிவம் துவக்க
காலத்தில் “லத்” அல்லது “லாட்” (lath or lat) என்றும், அசோக பிராமி
என்றும், மௌரிய பிராமி என்றும், “இந்தியன் பாலி” என்றும், ‘தம்மலிபி’
என்றும் அழைக்கப்பெற்றுள்ளது. இப்பெயர் தூண் என்பதற்கு வழங்கப்படும்
சொல்லின் அடிப்படையிலும், அரசர் பெயர் அடிப்படையிலும், அரச மரபு
அடிப்படையிலும், மொழியின் அடிப்படையிலும், தர்மத்தை எடுத்துரைத்ததின்
அடிப்படையிலும் அறியப்பட்டது. ஜேம்ஸ் பிரின்ஸெப் என்ற ஆங்கிலேயே அறிஞரே
இவ்வெழுத்துக்களை முதன் முதல் (1837) படித்தறிந்ததோடு கிரேக்கம் போன்ற பிற
மொழி எழுத்துக்களுடன் ஒப்பிட்டு அந்தந்த எழுத்துக்களுக்கான ஒலிகளை
நிச்சயித்த பெருமை பிரின்ஸப் அவர்களையே சாரும். வட இந்திய பிராமி
கல்வெட்டுக்களை பட்டிபுரோலு கல்வெட்டுக்களுடன் ஒப்பிட்டு
இவ்வெழுத்துக்களுக்கான ஒலிகளை பியூலரும் கணித்துள்ளார். இந்தியாவில் இருந்த
புத்த, சமண சமய இலக்கியச் சான்றுகளின் அடிப்படையில் இதற்கு “பிராமி”
(1886) என்று பெயரிட்டவர் டெர்ரியன் -டி- லாக்கோப்பெரி என்ற பிரெஞ்சு
அறிஞரே ஆவார். இப்பிராமி எழுத்து அவற்றை பயன்படுத்திய அரசுகளுக்கேற்ப “அசோக
பிராமி”, “மௌரிய பிராமி”, “குப்த பிராமி”, “குஷான பிராமி”, “சாதவாகன
பிராமி” எனப் பலவாறாக அழைக்கப் பெற்றுள்ளன. பிரம்மனிலிருந்து தோன்றியதால்
“பிராமி” எனப் பெயர் பெற்றுள்ளது என்ற கருத்தும் உள்ளது, ஆனால் இன்று வரை
“பிராமி” என்று பெயர் விவாதிக்கத்தக்க ஒன்றாகவே உள்ளது.
இவ்வெழுத்துக்களே தமிழ் மொழிக்கும் பயன்படுத்தப் பெற்றுள்ளது என்பது 20ஆம் நூற்றாண்டின் தொடக்கம் முதற்கொண்டே (1903, 1906, 1924) அறியப்பட்டது. இவையே தமிழகத்தின் துவக்க எழுத்துக்கள் என்பதும் பல ஆய்வுகள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழி:
இந்தியாவின் வடபகுதியில் அசோகன்
கல்வெட்டுக்கள் அனைத்திலும் இருவிதமான எழுத்துக்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
அவை பொதுவாக “தம்மலிபி” என்று பெயர் கூறப்படுகிறது. இருப்பினும் இவை
பிராமி மற்றும் கரோஷ்டி வரிவடிவங்களில் எழுதப்பட்டுள்ளன. இடமிருந்து வலமாக
எழுதும் எழுத்து முறை பிராமி என்றும், வலமிருந்து இடமாக எழுதும் எழுத்து
முறை கரோஷ்டி என்றும் சமாவயங்க சுத்த, பண்ணவாந சுத்த போன்ற சமண நூல்களும்,
லலிதவிஸ்தரா (64) என்ற பௌத்த நூலும் தெரிவிக்கின்றன. இவற்றுள் காலத்தால்
முற்பட்டது சமண நூலே ஆகும். இது பொ.ஆ.மு. முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.
இவைகள் குறிப்பிடும் எழுத்து வகைகளுள் பிராமி, கரோஷ்டி போன்றவை இடம்பெறுவது
போல் “தாமிலி” என்பதும் குறிப்பிடப்பெற்றுள்ளது. தமிழ் மொழியின்
“ழ”கரத்தின் சரியான உச்சரிப்பினை வடமொழியினர் அறிந்திலர். எனவே தமிழி
என்பதற்குப் பதிலாக “தாமிலி” என உச்சரித்திருக்கலாம். அசோகரது
கல்வெட்டுக்களிலும் கூட “சோழர்” என்பது “சோடா” என்றே குறிக்கப்பட்டுள்ளது.
எனவே பிராமி என்ற பெயர் வழங்கப் பெற்ற அதே கால கட்டத்திலேயே “தமிழி” என்ற
பெயரும் வழக்கில் இருந்துள்ளது இங்குச் சுட்டத்தக்கது. கரோஷ்டியும்,
பிராம்மியும் வேறு இரு எழுத்துக்களாகும். அசோகர் காலத்திற்கு முற்பட்டதாகக்
கருதத்தக்க அளவில் பட்டிபுரோலுவில் (ஆந்திரா, கிருஷ்ணா மாவட்டம்) கிடைத்த
எழுத்திற்கும் தமிழகத்தில் உள்ள எழுத்திற்கும் சில வேறுபாடுகள் இருப்பினும்
அவைகளுக்கிடையில் பலவகையில் ஒற்றுமைகள் உள்ளன. ஆதலால் “பிராமி” என்ற
எழுத்துக்களைத் தமிழில் “பிராமி” என்று அழைப்பது சரியா? என்று சிந்தனை
செய்யவேண்டும். சமண நூலில் காணப்படுவது போல “தமிழி” என்ற பெயர் தான்
சரியானது என நாகசாமி குறிப்பிடுகின்றார். தமிழகத்தைச் சேராதவர்கள்
அவர்களின் மொழி மரபிற்கு ஏற்றவாறு “தாமிழி” என்று கூறியிருக்கலாம் எனினும்
சிலர் இவை குகைகளில் மட்டும் இருப்பதால் இவற்றை “லேனா” எழுத்துக்கள்
என்றும் குறிப்பிடுகின்றனர்.
திராவிடி:
சுமார் 5-6ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக்
கருதப்படும் லலிதவிஸ்தரம் என்ற நூலில் 64 வகையான எழுத்துக்களுள் ஒன்றாக “திராவிடி”
குறிப்பிடப் பெறுகிறது. திராவிடி என்னும் பிற்காலப் பெயர் பண்டைய தமிழ் எழுத்தான
தமிழுக்குப் பொருந்தாது. இவை பொ.ஆ. 5-6ஆம் நூற்றாண்டில் வழக்கிலிருந்த தெலுங்கு,
கன்னடம், கிரந்தம் ஆகிய எழுத்துக்களுக்கு மட்டுமே பொருந்தும் என நாகசாமி
கருதுகின்றார்.
திராவிட தேசத்தில் வழங்கிய எழுத்து என்ற பொருளில் “திராமிளி” என்று பெயர் பெற்றது எனக் கருதலாம். அதனையே சிலர் “திராவிடி” என்று குறிப்பிட்டுள்ளனர். தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு இந்நான்கு மொழிகளையுமே திராவிட மொழிகள் என இன்று அழைக்கின்றோம். இவை நான்கும் ஒன்றாய் இருந்த காலத்தில் வழங்கிய எழுத்துக்களையே “திராவிடி” என்று குறித்திருப்பதாகக் கருதலாம். இவற்றால் நாம் அறியும் உண்மை, பொது ஆண்டிற்கு முன்பும் (BCE), பின்பும் (CE) சுமார் 300 ஆண்டுகள் வரையிலும், இந்தியாவில் வழங்கிய மொழிகள் இரண்டே, ஒன்று பிராகிருதம், மற்றொன்று தமிழ். இவை வடமொழி, தென்மொழி என்று பல நூல்களில் குறிப்பிடப்படுகின்றன. இந்தியா மிகப்பரந்த நிலப்பகுதியைக் கொண்டுள்ளதால் “பிராகிருதம்’ அவ்வப்பகுதிகளுக்கேற்ப பாஞ்சாலி, மாகதி, சூரசேனி, மைதிலி, அவந்தி, மகாராஷ்ட்ரீ போன்ற பல பெயர்களுடன் சிற்சில வேற்றுமைகளுடன் தொடங்கி காலப்போக்கில் பல மொழிகளாகப் பிரிந்து வளர்ந்தது. தமிழ் நாட்டில் தமிழ் சிறந்து விளங்கிற்று. தமிழ் நாட்டிற்கு வடக்கே வாழ்ந்தவர்கள் தமிழ் மொழியைத் “தாமிழம்” என்றே வழங்கினர். பிராகிருத மொழியில் “ழ” இல்லாததால் அதனை “திரமிலம்” என்றே குறித்துள்ளனர். இதனேயே சிலர் திராமிலம், “திராவிடம்” என்றெல்லாம் குறிப்பார்கள். தொடக்க காலத்தில் நிலவிய இரு பெரும் நாகரிகங்கள், பிராகிருத நாகரிகமும் தமிழ் நாகரிகமுமே ஆகும். எனவே தமிழ் மொழியைத் “தாமிழி” என்று வட மொழியினர் அழைப்பது நியாயமே. தாமிழியை மிகச் சரியாக கூறவேண்டுமானால் “தமிழ்” என்றே கூறலாம்.
தென் பிராமி:
அசோகர் காலத்திற்குப் பின்னர்
தமிழகத்தையும் ஆந்திர மாநில பட்டிபுரோலுவையும் தவிர்த்த தக்காணப் பகுதியில்
வழங்கிய பிராமியே “தென் பிராமி” என அழைக்கப்பட்டது என ஐராவதம் மகாதேவன்
கூறுகின்றார். தென்னகத்தில் குறிப்பாக ஆந்திர மாநிலத்திலிருக்கும்
பட்டிபுரோலு என்ற இடத்தில் கிடைத்த கல்வெட்டுக்களும் தமிழகத்தில் கிடைத்த
கல்வெட்டுக்களும் வரி வடிவத்தில் அசோகர் கல்வெட்டுக்களில் கிடைத்த
வரிவடித்திலிருந்து சில மாற்று வடிவங்களைப் பெற்றுத் திகழ்வதின்
அடிப்படையில் இவை “தென் பிராமி” என்றும் வட இந்தியாவில் கிடைப்பவை “வட
பிராமி” என்றும் அழைக்கப்படுகிறது என கா.ராஜன் குறிப்பிடுகின்றார்.
சங்ககாலத் தமிழ் (தமிழி) எழுத்துகளின் தோற்றமும் கண்டுபிடிப்பு வரலாறும் (பொ.ஆ.மு. 400 -பொ.ஆ.300):
மேற்சுட்டியது போல் சங்ககாலத்
தமிழ் (தமிழி) எழுத்தின் வரிவடிவம் 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலேயே
வெளி உலகிற்கு வந்தது. அதுவரையில் பொ.ஆ. 7ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த
பல்லவர்களது கல்வெட்டுக்களில் காணப் பெற்ற தமிழ் எழுத்துக்களும் பொ.ஆ. 8ஆம்
நூற்றாண்டைச் சேர்ந்த பாண்டியரது கல்வெட்டுக்களில் காணப்பெற்ற
வட்டெழுத்துகளும் காலத்தால் முற்பட்ட வரி வடிவங்களாக கருதப் பெற்றது. ஒரு
மொழிக்கு இரு வேறு வரிவடிவங்கள் இருப்பது ஆய்வறிஞர்களிடையே குழப்பத்தை
ஏற்படுத்தியது. வட இந்தியாவில் அப்பொழுது கண்டுபிடிக்கப்பட்டு
படித்துணரப்பட்ட “பிராமி” வரிவடிவத்திலிருந்தே தமிழ் வரிவடிவமும்,
வட்டெழுத்து வரிவடிவமும் தோன்றின என்பதை ஒப்பீட்டாய்வின் அடிப்படையில்
டி.ஏ.கோபிநாதராவ் தி.நா.சுப்பிரமணியன் போன்றோர் நிறுவியபோதிலும்
தமிழகத்தில் கிடைத்த சங்க காலக் (தமிழி) கல்வெட்டுக்களின் தனித்தன்மையினை
அக்காலத்தில் அறிய இயலாது போயிற்று.
பிராமியின் தோற்றம் குறித்து ஆய்வாளர்களின் கருத்துகள்:
கே.வி.ரமேஷ் இந்தியாவிலும் அதைச்
சுற்றியுள்ள முஸ்லீம்கள் அல்லாத நாடுகளிலும் வழங்கிய எழுத்துக்கள் “பிராமி”
என்ற எழுத்துக்களிலிருந்தே தருவிக்கப்பட்டுள்ளன. இந்தப் பிராமியானது
எவ்வித கலப்புமில்லாத ஆரம்ப நிலையில் உள்ளது (rudimentary &
primitive). இதிலிருந்தே தமது பகுதி மொழிக்கேற்ப எழுத்து நடைகளை மாற்றி
அவ்வப்பகுதியிலுள்ள மொழி வல்லுநர்கள் அசோக பிராமி அல்லது மௌரிய பிராமி,
குஷான பிராமி, சாதவாகன பிராமி, தமிழ் பிராமி எனப் பலவாறாகப் பகுத்துள்ளனர்
என்று குறிப்பிடுவதுடன் தமிழ் நாட்டுக் குகைகளிலுள்ள முற்கால பிராமி (early
Brahmi) எழுத்துப்பொறிப்புக்கள் கி.மு 4ஆம் நூற்றாண்டிற்கும் முற்பட்ட
காலத்தைச் சேர்ந்தது என உரைக்கிறார். மேலும் இவர் அசோகர் காலத்து (மௌரியர்
காலம்)மக்கள் நன்கு எழுத்தறிவைப் பெற்றிருந்தனர் என்றும் கூறுகின்றார்.
எம்.டி.சம்பத் : கி.மு 5-4ஆம் நூற்றாண்டில் நடைபெற்ற இந்தோ ஆரியர்களின் புலப்பெயர்ச்சியின் காரணமாக இலங்கையில் வரிவடிவம் உருவானது. இலங்கை பிராமி வடிவம் தொடக்க நிலை அடிப்படைக் கூறுகளைக் கொண்டு விளங்குகிறது எனக் கருத்துரைத்துள்ளார். கா.ராஜன்: தொல்லியல் சான்றுகளின் அடிப்படையில் குறிப்பாக மண்ணடுக்காய்வின் அடிப்படையில் தமிழ் பிராமியின் காலத்தை அசோகர் காலத்திற்கு முன்பாக எடுத்துச் செல்கிறார். சு.இராசவேலு: அசோகர் காலத்தில் இந்தியாவில் மக்கள் எழுத்தறிவு அற்றவர்களாக விளங்கியுள்ளனர் என்பதை மெகஸ்தனிஸ், ஸ்ட்ராபோ, அர்ரியன் போன்ற அயல்நாட்டார் குறிப்பின் அடிப்படையில் கூறுகின்றார். “அசோக பிராமி” எழுத்துக்கள் ஒழுங்கான அமைப்பில் பொறிக்கப்பட்டுள்ளன. முழுமை பெற்ற அமைப்புடையனவாக விளங்குகின்றன. மேலும், ஓர் எழுத்தே பல்வேறு வகையில் எழுதப்பட்டுள்ளது. எனவே அசோகர் காலத்திற்கு முற்பட்டே இந்தியாவில் எழுத்துக்கள் இருந்துள்ளது என்று கூறுகின்றார். அசோகர் காலத்தில் கிடைத்த கல்வெட்டுக்கள் அனைத்தும் அரசரின் ஆணைகளாகவே உள்ளன என்று உரைப்பதுடன் அசோகர் காலத்திற்கு முன்பே (கி.மு.400) தமிழகத்தில் பொதுமக்கள் எழுத்தறிவு பெற்றிருந்தனர் என்பதை அழகன் குளம் மற்றும் பிற அகழாய்வுகளில் கிடைத்த மட்கலங்கள் மூலம் விளக்குகின்றார். சங்க காலத் தமிழ் எழுத்துக்கள் அசோகர் பிராமிக்கு முற்பட்டது என்பது இவர்களது பொதுவான கருத்தாகும். ஆயினும் இதன் தோற்றம் குறித்து இவர்கள் மாறுபட்ட கருத்தைக் கொண்டுள்ளனர். எம்.டி.சம்பத், கே.வி.ரமேஷ் ஆகிய இருவரும் ‘பிராமி’ என்ற வரிவடிவத்திலிருந்து இலங்கை எழுத்துக்களும் இந்திய எழுத்துக்களும் தருவிக்கப்பட்டன என்பதை ஏற்கின்றனர். நடன காசிநாதன் மற்றும் சு.இராஜவேலு ஆகியோர் தொன்மைத் தமிழ் எழுத்துக்களிலிருந்தே (தமிழி) பிற வட இந்திய, இலங்கை எழுத்துக்கள் தோற்றம் பெற்றிருக்கும் எனக் கூறுகின்றனர். கா.இராஜன் இதன் தோற்றம் குறித்து அதிகம் பேசவில்லை. அண்மையில் நடந்து வரும் ஆய்வுகளின் மூலம் சிந்துவெளிப் பண்பாடு திராவிடப் பண்பாடே என்று பெரும்பாலான ஆய்வாளர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். சிந்துவெளி காலத்தில் வழக்கிலிருந்த எழுத்துக்கள் பகுதி சித்திர எழுத்துக்களாகவும் பகுதி ஒலி எழுத்துக்களாகவும் இருக்கக்கூடும் என்பது தொல்லெழுத்து வல்லுநர்களின் கருத்து. சிந்துவெளி எழுத்திலிருந்துதான் “பிராமி எழுத்துக்கள்” தோன்றின என்று கன்னிங்ஹாம் போன்ற சில அறிஞர்கள் கருதுகின்றனர். சிந்துவெளி எழுத்துக்களின் தன்மையைக் நோக்கினால் அவற்றிலிருந்து உயிர்மெய் வகையைச் சார்ந்த (voweled consonant) பிராமி எழுத்துக்கள் தோன்றி இருக்க முடியாது என்றும் பிராமி எழுத்துக்கள் வடசெமிடிக் (அராபிய) எழுத்துக்களைப் பின்பற்றி அமைக்கப்பட்டன என்றும் இது பொ.ஆ.மு. 700இல் தோன்றியிருக்கக்கூடும் என்றும் சில ஆய்வாளர்கள் கருதுகின்றனர். முதலில் பிராமி எழுத்துக்களும் வலமிருந்து இடமாகவே எழுதப்பெற்றுள்ளது. “ஏரான்” என்ற இடத்தில் கிடைத்த ஒரு காசில் “தம்பலஸ” என்று எழுதப்பெற்றுள்ளது. இதுவே நமக்குக் கிடைத்துள்ள பிராமி எழுத்துக்களில் மிகவும் தொன்மையானதாகும். இது வலமிருந்து இடமாக எழுதப்பெற்று பின் இடமிருந்து வலமாக எழுதப்பெற்றுள்ளது. இங்கு ஒன்றை நினைவில் கொள்ளவேண்டும். அராபிய எழுத்துக்களிலிருந்து பிராமி தோன்றியது என்றால் அராபிய எழுத்துக்களே பிராமியாக மாறிவிட்டன என்று பொருள் அல்ல. சில எழுத்து ஒற்றுமையைக் கொண்டு சமஸ்கிருத மொழிக்கு ஏற்ப அராபிய எழுத்துக்களை அறிந்தவர்கள் இவ்வெழுத்துக்களைத் தோற்றுவித்தனர் என்பதே பொருள். “பிராமி” தோன்றிய பொழுதே தமிழி எழுத்துக்களும் தோன்றியிருத்தல் வேண்டும். இங்கும் அராபிய எழுத்துக்களுக்கான கருத்துக்களை ஏற்றுத் தமிழ் மொழிக்கு ஏற்ப ழ, ள, ற, ன என்ற சிறப்பு ஒலிகளுடன் தமிழ் மொழி வல்லுநர்கள் தோற்றுவித்தனர் என்று கொள்வதும் பொருந்தும். இருப்பினும் தமிழகத்தில் இதுவரை கிடைத்த கல்வெட்டுக்கள் அனைத்தும் இடமிருந்து வலமாகவே எழுதப்பெற்றுள்ளன. ஆதலின் இவை பொ.ஆ.மு. மூன்றாம் நூற்றாண்டிற்கு முந்தையதாகக் கொள்வதில் தவறில்லை என கா.ராஜன் கூறுகின்றார்.
எழுத்து வகை (உயிர் மெய் வரை):
புள்ளியில்லா உருவே அகரமோடு கூடி,
அதே உருவாகவும் ஏனைய உயிரோடு சேரும்போது உருபு திரிந்தும் தமிழ்
எழுத்துக்கள் வழங்குகின்றன என்பதைத் தொல்காப்பியத்திலிருந்து அறியலாம்.
ஆதலின் இதை உயிர்மெய் வகை (voweled consonant) என்று அழைத்தல் வேண்டும்.
ஆய்வறிஞர்களின் மொழி பற்றிய கருத்துகள்:
தமிழ் பிராமி கல்வெட்டுகளில்
வழங்கிய மொழி பிராகிருதம் என்று தொடக்கக்காலக் கல்வெட்டியல் அறிஞர்களான
வெங்கையா, கிருஷ்ணசாஸ்திரி ஆகியோர் கருதினர். முதன் முதல் இக்கருத்தை
மாற்றி அதைத் தமிழ் என்று உணர்த்தியவர் கே.வி.சுப்ரமணிய அய்யர் ஆவார்.
இக்கருத்தை ஐராவதம் மகாதேவன் தமது நூல் வாயிலாக மேலும் உறுதி செய்துள்ளார்.
இன்று தமிழகத்தில் கிடைத்துள்ள தமிழ் பிராமி (பழந்தமிழ்) கல்வெட்டுக்கள்
அனைத்தும் தமிழ் மொழியிலேயே உள்ளன என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.
இக்கல்வெட்டுக்களில் 25% பிராகிருதச் சொற்கள் கலந்துள்ளன. இப்பிராகிருத
சொற்கள் வட இந்தியாவில் அக்காலத்தில் பொதுவாக கல்வெட்டுகளில் வழங்கிய
பிராகிருத மொழியோடு தொடர்புடையது என்பது சுப்ரமணியன் அவர்களின் இன்னொரு
கண்டுபிடிப்பு ஆகும். அசோகர் கல்வெட்டுக்களில் வழங்குவது போல் தமிழ் பிராமி
கல்வெட்டுக்களில் கிழக்கிந்திய பிராகிருதத்தின் தாக்கம் அதிகம் இல்லை. இவை
சமணச் சார்புடையனவாக இருந்தமை இதற்கு காரணமாகலாம் என்ற ஐராவதம் மகாதேவனின்
கருத்தும் முக்கியமானது.
கண்டுபிடிப்புக்கள்:
“தமிழி” எழுத்துக்களை 1903இல்
திரு.வெங்கோபராவ் முதன் முதல் கீழவளவு என்ற இடத்தில் கண்டு
வெளிக்கொணர்ந்தார். 1906இல் மறுகால்தலை என்ற இடத்தில் எல்.எ.கெமைடு
(L.A.Cammiade) அவர்கள் ஒரு கல்வெட்டையும் அதே ஆண்டில் பிரான்சிஸ்
(W.Francis) மற்றொரு கல்வெட்டையும் கண்டுபிடித்தார். அதன் பிறகு
ஆனைமலை, அழகர்மலை, மேட்டுப்பட்டி, முத்துப்பட்டி, சித்தன்னவாசல் முதலிய
இடங்களில் சில கல்வெட்டுக்களை ச.கிருஷ்ண சாஸ்திரியும், கே.வி.சுப்பிரமணிய
அய்யரும் கண்டுபிடித்தனர். அதன் பின்பு திருச்சி, மாமண்டூர் முதலிய
இடங்களிலும் சில கல்வெட்டுக்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அறச்சலூரில்
(அறச்சாலையூர்) ஒரு கல்வெட்டை மயிலை சீனி வேங்கடசாமி, செ.இராசு ஆகியோர்
கண்டுபிடித்தனர் (1960). 1966இல் ஐராவதம் மகாதேவன் திருவாதவூரில் மற்றொரு
கல்வெட்டைக் கண்டுபிடித்தார். இதைத் தொடர்ந்து பல அறிஞர்கள் தமிழகத்தில்
பல்வேறு இடங்களிலிருந்து ஏராளமான கல்வெட்டுக்களைக் கண்டுபிடித்து
வருகின்றனர். இன்று இதன் எண்ணிக்கை 94 ஆகும்.
இது போன்று பல இடங்களிலும் தமிழிக் கல்வெட்டுக்கள் கண்டுபிடிக்கப்பட்டு ஆவணப்படுத்தப்பட்ட போதிலும் இவ்வெழுத்துக்களை முறையாகக் படிக்கும் முயற்சி 1910ஆம் ஆண்டிற்குப் பின்னரே தொடங்கியது எனலாம். 1906இல் கண்டுபிடிக்கப்பட்ட மறுகால்தலை கல்வெட்டு 1910ஆம் ஆண்டு கல்வெட்டு ஆண்டறிக்கையிலேயே (ARE), வெளிவந்துள்ளது. வட இந்திய பிராமி வரிவடிவம் தமிழ் நாட்டில் கிடைத்ததை அறிந்த அறிஞர்கள் அதைப் படிப்பதில் ஆர்வம் கொண்டனர். இதைத் தொடர்ந்து கே.வி.சுப்ரமணிய அய்யர், எச்.கிருஷ்ண சாஸ்திரி, வெங்கோப ராவ், வெங்கையா போன்றோர் இதில் கவனம் செலுத்தினர். இதன் விளைவாக புதிதாகக் கண்டுபிடிக்கப் பெறும் தமிழி கல்வெட்டுக்கள் ஆண்டுதோறும் கல்வெட்டு ஆண்டறிக்கையில் வெளிவர ஆரம்பித்தன. 1924ஆம் ஆண்டிற்குள் 12 இடங்களிலிலிருந்து 32 கல்வெட்டுக்கள் வெளிவந்தன. இதனைக் கொண்டே கே.வி. சுப்ரமணிய அய்யர் 1924இல் இவ்வெழுத்துக்கள் தமிழ் மொழியைச் சார்ந்ததே என உறுதிப்படுத்தினார். 1882இல் இராபர்ட் சீவலாலும், 1906இல் டபிள்யு.ஃபிரான்ஸிஸாலும் கண்டுபிடிக்கப்பட்ட மாங்குளம் கல்வெட்டு 1965இல் தான் முழுமையாகப் படித்துணரப்பட்டது. இதில் பாண்டிய அரசர் நெடுஞ்செழியன் பெயர் உள்ளதை முதன் முதலில் கண்டறிந்த பெருமை ஐராவதம் மகாதேவனையே சாரும். அண்மைக் காலத்தில் (2006) இக்கல்வெட்டுக்கள் நடுகற்களிலும் நெடுநிலைக்கற்களிலும் இருப்பதைப் புலிமான் கோம்பை மற்றும் தாதப்பாட்டியில் கிடைத்த கல்வெட்டுக்கள் கொண்டு தமிழ்ப் பல்கலைக்கழகம், கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் துறை முனைவர் பட்ட மாணவர்கள் வி.பி.யதீஸ்குமார் மற்றும் எஸ்.செல்வக்குமார் ஆகியோர் கண்டறிந்தனர். இக்கல்வெட்டுக்கள் குறித்து ஆய்வு செய்த கா.ராஜன் தமது கருத்துக்களை விரிவாக விளக்கியுள்ளார். கல்வெட்டுக்களில் மட்டுமின்றி பானை ஓடுகளிலும் காசுகள், முத்திரைகள் மற்றும் மோதிரங்களில் இருக்கும் எழுத்துக்களையும் கண்டறிந்தனர். இவ்வகையில் பானை ஓடுகளிலுள்ள பழந்தமிழ் எழுத்துப்பொறிப்புகள் முதன் முதலில் மார்டிமர் வீலர் நிகழ்த்திய அரிக்கமேடு அகழாய்வின் மூலம் அறியப் பெற்றுள்ளன. அதுபோல் காசுகளிலுள்ள பழந்தமிழ் எழுத்துப் பொறிப்புகளை முதன் முதலில் 1985இல் காசுகளில் கண்டு வெளியிட்டவர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி ஆவார். இவர் சங்க காலத்தில் சிறப்புற்று விளங்கிய பாண்டிய மன்னர் பெருவழுதியின் காசுகளைக் கண்டுபிடித்து படித்து தமிழக எழுத்தியல் வரலாற்றுடன் நாணய வரலாற்றிற்கு ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தினார். இதைத் தொடர்ந்து 1987இல் சேர மன்னர் கொல்லிப் புறை காசுகளைக் கண்டுபிடித்து சேர வரலாற்றுக்குப் பெருமைச் சேர்த்தவர் ஆர்.நாகசாமியாவார். இவ்வெழுத்துக்கள் முத்திரைகளில் இருப்பதை 1981இல் “கோவேத” என்று தமிழ் பிராமியில் எழுதப்பட்ட ஆனைகொடை (இலங்கை) முத்திரைக் கொண்டு இந்திரபாலாவும் பொ.ஆ. 2000இல் “தீயன்” என்ற தமிழ் பிராமி எழுத்துப் பொறிப்பை மோதிரத்தில் சங்கரன் ராமனும் முதன் முதலில் கண்டுபிடித்தனர். இவ்வெழுத்துக்களைக் கண்டறிந்து படித்து தமிழ் மொழிக்கு பெருமை சேர்த்த அனைத்து அறிஞர்களின் செயல்களும் மிகவும் போற்றுதற்குரியதாகும். அவற்றுள் மிகவும் முக்கியமான பங்களிப்புகள் பின்வருமாறு.
சங்ககாலத் கல்வெட்டுக்களைப் படித்ததில் அறிஞர்களின் பங்களிப்பு
வெங்கையா
அசோகர் கல்வெட்டுக்களில் காணப்படும் பிராமி வரிவடிவத்துடன் ஒப்புநோக்கி இவை பிராமி வரிவடிவத்தை ஒத்துள்ளன என்ற கருத்தை வெளியிட்டவர்.
கே.வி.சுப்ரமணிய ஐயர்
எச்.கிருஷ்ண சாஸ்திரி
தி.நா.சுப்பிரமணியன்
ஐராவதம் மகாதேவன்
ஆர்.பன்னீர்ச்செல்வம்
ஆர்.நாகசாமி
கா.ராஜன்
மண்ணடுக்கு ஆய்வுகளின் அடிப்படையில்
பண்பாட்டாய்வின் அடிப்படையிலும் குறியீடுகள், சிந்துவெளி பண்பாடு தொட்டு
சில வடிவ மாற்றங்களுடன் தொடர்ந்து சங்க காலத்திலும் வழங்கியுள்ளது எனக்
குறிப்பிடுகின்றார்.
தமிழ் எழுத்தின் வளர்ச்சி நிலை:
இந்தச் சங்ககாலத் தமிழ் (தமிழி)
எழுத்துக்கள் இது நாள் வரை சுமார் 32 இடங்களிலிருந்து 94 குகைக்
கல்வெட்டுகளும் ஏறக்குறைய 25 தொல்லியல் வாழ்விடப் பகுதிகளிலிருந்து
250க்கும் மேற்பட்ட பானை கீறல்களும் (graffiti) கண்டுபிடிக்கப் பெற்றுள்ளன.
இவை தவிர முத்திரைகளிலும், மோதிரங்களிலும், காசுகளிலும் இவ்வெழுத்துக்கள்
கிடைத்துள்ளன. இவ்வெழுத்துக்களிலிருந்தே பொ.ஆ. 4ஆம் நூற்றாண்டிலிருந்து
வட்டெழுத்துக்களும் பொ.ஆ. 7ஆம் நூற்றாண்டில் தமிழ் எழுத்துக்களும் தோற்றம்
பெற்றுள்ளன.
சங்க காலத் தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட பானை ஓடு - கொடுமணல்
அயல் நாட்டில் கிடைத்த பானை ஓடுகள்
சங்க்க் கால எழுத்துக்கள் பொறித்த மோதிரங்கள், முத்திரை காசுகள்
மோதிரங்கள்
முத்திரைகள்
|
- Home-icon
- பெருங்கற்காலம்
- _நெடுங்கல்
- _கல்திட்டை
- _முதுமக்கள் தாழி
- _கல்பதுக்கை
- பாறை ஓவியங்கள்
- _வெண்சாந்து
- _செஞ்சாந்து
- _கருப்பு
- தொல்லியல்
- _மண்பாண்டங்கள்
- _குறியீடுகள்
- _கல்மணிகள்
- _எழுத்து பொறிப்புகள்
- கல்வெட்டியல்
- _தமிழி
- _வட்டெழுத்து
- _கிரந்தம்
- _தமிழ்
- கற்றளி
- _பல்லவர்
- __கட்டடக்கலை
- __சிற்பக்கலை
- _பாண்டியர்
- __கட்டடக்கலை
- __சிற்பக்கலை
- _சோழர்
- __கட்டடக்கலை
- __சிற்பக்கலை
- _முத்தரையர்
- __கட்டடக்கலை
- __சிற்பக்கலை
- நடுகற்கள்
- _பெருங்கற்காலம்
- _சங்க காலம்
- _வரலாற்றுக்காலம்
- _நடுகல் கல்வெட்டு
- __தமிழி
- __வட்டெழுத்து
- __தமிழ்
- சிறப்பு கட்டுரைகள்
- _தொல்லியல்
- _காந்தளூர் சாலை
- _அயல் தொடர்புகள்
- _தமிழின் சிறப்பு
- _இலக்கியம்
- _கலைகள்
- _களப்பிரர்
- _நாணயங்கள்
- _சிலம்பின்காலம்
- _கட்டிடக்கலை
- சங்க காலம்
- _பண்பாடு
- _வாழ்க்கை முறை
- _உணவு முறை
- _சங்க கால வழிபாடு
- _சங்க கால நம்பிக்கை
- நேர்காணல்கள்
- _ அறிஞர்.கா ராஜன்
- __தொல்லியல்Part 1
- __தொல்லியல்Part2
- _அறிஞர்.சாந்தலிங்கம்
- __சமணம்தொடர்1
- __சமணம்தொடர்2
- __சமணம்
- __சித்திர மேழி
- _அறிஞர்.பூங்குன்றன்
- __பெருவழிகள்
- __நீர் மேலாண்மை
- _
- _
- _
- _
- _
- ஆவணப்படங்கள்
- __பூலாங்குறிச்சி
- ஐவகை நிலங்கள்
- _குறிஞ்சி
- _முல்லை
- _மருதம்
- _நெய்தல்
- _பாலை
- கட்டிடக்கலை
- _1
- _2
- _#
- _4
- _5
- _6
- _+
- _+
- _9
- _10
- சிற்பக்கலை
- _சிவ வடிவங்கள்
- _!
- _2
- _3
- _4
- _5
- வரலாறு
- _1
- _2
- _3
- _4
- _5
- வழிபாடு
- _1
- _2
- _3
- _4
- _5
- விழவும் சடங்கும்
- _1
- _2
- _3
- _4
- _5
- சமயங்கள்
- _1
- _2
- _3
- _4
- _5
- ஆகமம்
- _1
- _2
- _3
- _4
- _5
- வணிகம்
- _1
- _2
- _3
- _4
- _5
- நீர் மேலாண்மை
- _1
- _2
- _3
- _4
- _5
- உழவும் தொழிலும்
- _1
- _2
- _3
- _4
- _5
- மந்திரசடங்கு
- _1
- _2
- _3
- _4
- _5
- பண்பாடு
- _1
- _2
- _3
- _4
- _5
- போர்க்கலை
- _1
- _2
- _3
- _4
- _5
- தேவதாசிகள்
- _1
- _2
- _3
- _4
- _5
- வெளிநாட்டினர் குறிப்புகள்
- _1`
- _2
- _3
- _4
- _5
- சங்கஇலக்கியஆய்வுகள்
- _1
- _2
- _3
- _4
- _5
- ஆய்வுக்கட்டுரைகள்
- _1
- _2
- _3
- _4
- _5
- செய்திதாள்களில்
- _1
- _2
- _3
- _4
- _5
- மின்னூல்கள்
- _கல்வெட்டுக்கள்
- _தொல்லியல்
- _Excavation Report
- திருக்கோயில்
- _1
- _2
- _3
- _4
- _5
- இனவரைவியல்
- _1
- _2
- _3
- _4
- _5
- தமிழகப் பழங்குடிகள்
- _1
- _2
- _3
- _4
- _5
- இசை கருவிகள்
- _1
- _2
- _3
- _4
- _5
- படைக்கலன்கள்
- _1
- _2
- _3
- _4
- _5
- நாட்டுப்புற தெய்வங்கள்
- _1
- _2
- _3
- _4
- _5
- மானுடவியல்
- மெய்க்கீர்த்திகள்
- _சோழர்கள்
- _பாண்டியர்
- _கொங்கு சோழர்கள்
- _விஜயநகரம்
- அகழாய்வுகள்
- _தொல் பழங்காலம்
- _சங்ககாலம்
- _வரலாற்றுக்காலம்
- _வாழ்விடம்"சாம்பல் மேடு
- வரலாற்றுச் சின்னங்கள்
- _குடைவரைகள்
- _அரண்மனைகள்
- _கோட்டைகள்
- செப்பேடுகள்
- _பல்லவர்
- _பாண்டியர்
- _சோழர்
- _விசயநகரர், நாயக்கர்
- _சேதுபதி
- _பிற செப்பேடுகள்
- _1
- _2
- _3
- _4
- _5
3 கருத்துகள்
மிகவும் பயனுள்ளதாக இருந்தது மேலும் நம் மொழியின் ஆழத்தை அறியவும் முடிந்தது நன்றி
பதிலளிநீக்குமிகவும் பயனுள்ளதாக இருந்தது மேலும் நம் மொழியின் ஆழத்தை அறியவும் முடிந்தது நன்றி
பதிலளிநீக்குmiga arumai
பதிலளிநீக்கு