முசிறித்துறைமுகம்

பட்டணம் முசிறித்துறைமுகம்
      து.சுந்தரம், கோவை.




      2013-ஆம் ஆண்டு மே மாதம் முதல் நாள், கோவை பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி கல்வெட்டியல் பட்டயப்படிப்பு மாணவர்கள் பேராசிரியர் இரவி அவர்களுடன் தொல்லியல் பயணமாக, கேரளத்தின் பட்டணம் அகழாய்வுக்களம் நோக்கிப்புறப்பட்டோம். ஏறத்தாழ, நாலரை மணி நேரப்பயணத்திற்குப்பின் எர்ணாகுளத்தைக்கடந்து, பரவூர் என்னும் ஊருக்கருகில் உள்ள பட்டணம் சென்றடைந்தோம்.

      தற்போது அங்கே அகழாய்வு மேற்கொண்டிருப்பவர் முனைவர்  பி.ஜே.செரியன் அவர்கள். இதற்கு முன்னரே 2007-ஆம் ஆண்டிலும், 2008-ஆம் ஆண்டிலும் அகழாய்வுகள் நடந்துள்ளன. 2007-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட அகழாய்வு குறித்து அதில் கலந்துகொண்ட (?) வீ.செல்வகுமார், ஆவணம்,2008 இதழில் ஒரு கட்டுரை அளித்துள்ளார். அதில் காணப்படும் செய்திகளின் முக்கியக்கூறுகள் வருமாறு:

  • சங்க இலக்கியம், மற்றும் கிரேக்க,ரோமானிய இலக்கிய்ங்களில் குறிப்பிடப்படும் முசிறி என்னும் சங்ககாலத்துறைமுகம் இந்தப்பட்டணம் ஊரே.
  • அகழாய்வில்  ஐந்து காலகட்டப் பண்பாட்டு நிலைகள் காணப்பட்டன.

கி.மு. 500 கி.மு. 2  நூ.ஆ. : முதல் கட்டம் (இரும்புக்காலம்)
கி.மு. 2  -  கி.பி.  4  நூ.ஆ. : 2-ஆம் கட்டம் (வரலாற்று. கா)
கி.பி.  5  -  கி.பி 10   நூ.ஆ. : 3-ஆம் கட்டம் (இடைக்காலம்)
கி.பி. 10  -  கி.பி. 15   நூ.ஆ. : 4 ( தடயங்கள் இல்லை )
கி.பி.  15 -  கி.பி. 19  நூ.ஆ. : 5-ஆம் கட்டம் (நவீன காலம்)
  • படகுத்துறையும், படகு கட்டப்பயன்படும் மரத்தூண்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
  • ஒற்றை மரத்தில் குடைந்து உருவாக்கப்பட்ட படகின் அடிப்பகுதி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
  • ஆம்போரா வகை மதுச்சாடி, சங்ககாலச்சேரர் காசுகள், உறைகிணறு மற்றும், கல்மணிகள், இரும்புப்பொருள்கள், இன்ன பிற.
  • அரிக்கமேடு, அழகன் குளம் ஆகியவற்றை ஒத்த ஒரு சங்ககாலத்துறைமுகம் பட்டணம் பகுதியில் இருந்தது.






     இனி, மீண்டும் பட்டணம் அகழாய்வுக்களம். பட்டணம் சிற்றூரில் ஒரு சிறிய தெருவின் முனையிலேயே, அகழாய்வு நடக்கும் மனையிடம் (Site) போகும் வழி குறித்த பலகை வைக்கப்பட்டிருந்தது. உள்ளே நுழைந்து சற்றுத் தொலைவு சென்றதும் அலுவலகக் கட்டிடமும், அதைக்கடந்து ஒரு தோப்புபகுதியில் ஆய்வுப்பகுதி புலப்பட்டது. தென்னை,கமுகு,சாதிக்காய் மரங்கள் நிறைந்த தோப்பு. கமுக மரத்தில் மிளகுக்கொடிகள் படர்ந்த அழ்கான சூழ் நிலையில் நடுவே அகழாய்வுக்குழி. ஏறத்தாழ 20 25 அடி நீளமும், 12 அடி அகலமும், 6 அடி ஆழமும் கொண்ட ஆய்வுக்குழியை முற்றிலும் மூடியிருக்குமாறு வெள்ளைத்துணியால் கட்டப்பட்ட கூடாரம். அதை மையப்படுத்தி மேலும் சில துணிக்கூடாரங்கள். அவற்றின் கீழ், மேசைகளும்  நாற்காலிகளும். மேசைகளின் மேல், ஆய்வுக்குழியில் கிடைத்த பானை ஓடுகள் போன்ற பொருள்கள். அவை வகைப்படுத்திய பொருள்கள். வகைப்படுத்தாத பொருள்கள் தனியே ஓரிடத்தில் குவிக்கப்பட்டிருந்தன. ஓரிரு மேசையில் ஆய்வு உதவியாளர்கள் பொருள்களை வகைப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தனர். மற்றுமொரு மேசையில் வகைப்படுத்தி, அடையாளம் கண்டு, முறையான ஆய்வுப்பெயர் எழுதி பாலிதீன் உறைகளில் இட்டு பிளாஸ்டிக் பெட்டிகளில் வைக்கப்பட்ட பொருள்கள். ஆய்வுக்குழிக்குப்பக்கவாட்டிலேயே குழியிலிருந்து வெளியிலெடுத்த மண்ணைக்கொட்டியதால் ஏற்பட்ட மேடு. மேட்டின் சரிவில் நாற்காலியிட்டு அமர்ந்தவாறு அகழ்ந்த மண்ணைச்சலித்துக்கொண்டிருந்த பணியாளர்கள்.

       அகழாய்வுக்குழி, தற்போது 2 மீட்டர் ஆழம் தோண்டப்பட்டுள்ளது. இன்னும் 2 மீட்டர் ஆழம் தோண்டப்படும் என்பது செரியன் அவர்கள் சொன்ன தகவல். அகழாய்வுக்குழியில் செங்கற்களின் அடுக்கு ஒன்று காணப்பட்டது.

     பி.ஜே. செரியன், மற்றும் அவருடன் இணைந்து பணியாற்றும் முனைவர் பிரீத்தா நாயர் ஆகிய இருவரையும் எங்கள் குழு சந்தித்து அறிமுகம் செய்து கொண்டபிறகு அகழாய்வின் விவரங்கள் குறித்துக்கேட்டோம். செரியன் அவர்கள் ஆய்வின் பின்னணி, நோக்கம், முன்னர் நடந்த ஆய்வுகள், ஆய்வு வெளிப்படுத்திய செய்திகள் எனப்பல்வேறு விளக்கங்கள் அளித்தார். கி.பி. 8-ஆம் நூற்றாண்டுவரை மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகள் உருவாகாத காலகட்டத்தில் ஒரே தமிழினமாய் இருந்தோம் என்பதைச்சுட்டிக்காட்டினார். முசிறி என்னும் துறைமுகம் தமிழகத்தின் முற்காலச்சேரர் காலத்தில் சிறப்பான வணிகச்செயல்பாடுகளோடு இயங்கிய ஒரு நகரமாக இருந்தமை, உரோமானியர் தமிழகத்தோடு கொண்ட வணிகத்தொடர்பு ஆகியவை பற்றிச்சொன்னார்.





பட்டணம் என்னும் இந்தப்பகுதிதான் பண்டைய முசிறி என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதையும், முசிறி பற்றி பிளினி தம் பயணக்குறிப்பில் Muziris”  எனக்குறிப்பிட்டுள்ளதையும் சுட்டினார்.

        மாணவர்கள் தங்கள் ஐயங்கள் பற்றிய பல கேள்விகளை எழுப்பி விளக்கங்கள் பெற்றனர். பின்னர், செரியன் அவர்களுக்குச்சிறப்பு செய்யும் முகத்தான், அவருக்கு எங்கள் குழு சார்பாக நினைவுப்பரிசு ஒன்றை அளித்து, அவ்ருடன் இணைந்து நாங்கள் குழுவாக ஒளிப்படம் எடுத்துக்கொண்டோம்.

        பின்னர், பிரீத்தா நாயர், அகழாய்வில் கிடைத்த பொருள்களை ஒவ்வொன்றாக எடுத்துக்காட்டினார். கண்ணாடி மணிகள், மட்கலக்கிண்ணம், இரும்புக்கத்தி, பலவண்ணக்கல்மணிகள், பானை மண் கொண்டு செய்த மூடி ஆகிய பல்வேறு பொருள்களைப்பார்த்தோம். அடுத்து, அலுவலகக்கட்டிடத்தில் சுவரில் பொருத்தப்பட்ட பல்வேறு படங்களைப்பார்த்து ஒளிப்படம் எடுத்துக்கொண்டோம். அவை, முன்னர் நடந்த அகழாய்வுகளின்போது கண்டெடுக்கப்பட்ட பொருள்களின் விளக்கத்துடன் கூடிய படங்களாகும்.  இப்படங்களில் சிலவற்றில் மலையாள மொழியில் விளக்கங்களும், சிலவற்றில் ஆங்கில மொழியில் விளக்கங்களும் இருந்தன. இப்படங்களில் இருந்த குறிப்புகளின் அடிப்படையில் கிடைத்த பல்வேறு செய்திகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன்.

அகழாய்வு அலுவலகத்தில் இருக்கும் விளக்கக்குறிப்புகள்


கேரளத்தின் எர்ணாகுளம் மாவட்டம் வடக்குப்பரூர் அருகில், பெரியாற்றின் டெல்டாப்பகுதியில் அமைந்துள்ள ஊர் பட்டணம். நிலத்தொல்லியல் அறிஞர் (Geo Archaeologist)  கே.பி. ஷாஜன்  (K.P. Shajan) என்பவரால் இப்பகுதி அடையாளம் காணப்பட்டு, தொல்லியல் அற்ஞர்களின் கவனத்தை ஈர்த்தது. 1990-ஆம் ஆண்டின் பிற்பகுதியிலிருந்து,  தொல்லியல் ஆய்வாளர்களும்,வரலாற்று அறிஞர்களும் இப்பகுதியை ஆய்வு செய்யத்தொடங்கினர். பாரம்பரியக்கல்வி மையம் (Centre for Heritage Studies)  என்ற அமைப்பினர் 2004-இல் சோதனை அகழாய்வினை நடத்தி, மேற்பரப்பு ஆய்வில் கிடைத்த பொருள்களைக்கொண்டு “ முசிறி “ பற்றிய கருத்துத்தெளிவை வெளிப்படுத்தினர். கேரள வரலாற்று ஆய்வுக்கழகம் (Kerala Council of Historical Research)  அமைப்பினர் 2007-இல் பன்னாட்டு அமைப்பினரோடு இணைந்து அகழாய்வினைத்தொடங்கினர். முதன்முதலாகப் பன்னாட்டு அமைப்பினர் இணைந்து நடத்தும் அகழாய்வு இதுவேயாகும்.

      

       
மலபார் கடற்கரைப்பிரதேசத்தில் இந்தோ-ரோமன் வணிகம் நடை
பெற்ற காலம் கி.மு. 100 கி.பி. 400 ஆகும்.  கேரளத்தோடு ரோமானியர், வட ஆப்பிரிக்காவினர், மேற்கு ஆசியாவினர் ஆகியோர் கொண்ட தொடர்பினை வெளிப்படுத்திய முதல் வாழ்விடப்பகுதி பட்டணமாகும். கேரளத்தின் முதல் பெருங்கற்கால வாழ்விடம் பட்டணம் என்று கருதப்படுகிறது. முதன் முதலாக முற்காலச்சேரரின் நாணயம் கிடைத்துள்ளது பட்டணத்தின் இன்னொரு சிறப்பாகும். பட்டணம் பண்டைய துறைமுக நகரம் என்பதற்குச்சான்றாக இங்கு கிடைத்துள்ள படகுத்துறை மற்றும் படகுகளின் பகுதிகள் திகழ்கின்றன.

     2011-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட அகழாய்வின் நோக்கங்களாகக் கீழ் கண்டவை குறிப்பிடப்படுகின்றன:

பட்டணத்தின் வடகிழக்குப்பகுதி நீங்கலாகவுள்ள மற்ற பகுதிகள் ஆய்வு செய்யப்படுதல். பட்டணத்தைச்சுற்றியுள்ள 50 கி.மீ. பரப்பில் மேற்பரப்பு ஆய்வு செய்தல். வரலாற்றுக்கு முற்பட்ட காலத்து வாழ்விடங்கள்,புதைவிடங்கள், மற்றும் தொல்லியல் தொடர்பான எச்சங்கள் ஆகியனவற்றை அடையாளம் காணல். இதற்கு முன்னர் நான்கு கட்டங்களில் சிறு பகுதியாக வெளிக்கொணர்ந்த படகுத்துறை செங்கற்கட்டுமானங்களை மீண்டும் கொணர்ந்து கடல் வாணிகத்தின் கூறுகளை அறிதல். துறைமுகம் மற்றும் அதனைச்சார்ந்திருந்த நகரத்தின் வாழ்க்கை நிலை, ஐரோப்பியர், மேற்காசியாவினர் ஆகியோர் வருகை, அவர்களோடு இங்கிருந்தவர் கொண்ட இருவழித்தொடர்புகள் ஆகியனவற்றை அறிதல். பண்டைய முசிறிக்கும் இப்போதைய பட்டணத்திற்கும் இடையே உள்ள தொடர்பினைக்காணல். இப்பகுதியைப்பாரம்பரியச்சின்னமாக ஆக்குதல். அகழாய்வுக்களத்தின் அருகிலேயே ஒரு அருங்காட்சியகம் அமைத்தல்.

      மேலே குறிப்பிட்ட நோக்கத்தில், 2011-இல் முசிறி பாரம்பரியத் திட்டம் (Muziris Heritage Project) என்னும் திட்டத்தின் கீழ் கேரள வரலாற்று ஆய்வுக்கழகம் வரலாற்று ஆய்வினைத்தொடங்கியது. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், ரோம் பல்கலைக்கழகம், பர்ஹாம் பல்கலைக்கழகம், பிரிட்டிஷ் அருங்காட்சியகம் போன்ற அயல் நாட்டு அமைப்புகளும் மற்றும் இந்தியத்தொல்லியல் ஆய்வுக்கழகமும் (Archaeological Society of India) இவ்வாய்வில் பங்குபெற்றன.




   



கருத்துரையிடுக

0 கருத்துகள்

தொடர்புக்கு

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

இதுவரை இந்த வலைப்பூவுக்கு வந்து வாசித்தவர்கள்